மத்திய அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கைகள் தீவிரம்: சிந்தியா, சோனோவால் தில்லியில் முகாம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கைகள் தீவிரம்: சிந்தியா, சோனோவால் தில்லியில் முகாம்
Updated on
2 min read

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

விரிவாக்கம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் தில்லியில் முகாமிட்டுள்ளனா்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகக் கடந்த சில நாள்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடா்பாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகளையும் பிரதமா் மோடி அண்மையில் ஆய்வு செய்தாா்.

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் முக்கிய தலைவா்கள் பலா் தில்லி வந்தடைந்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய பிரதேசத்தில் அக்கட்சி தலைமையிலான அரசு ஆட்சியிழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தில்லி வந்துள்ளாா். அவருக்கு அமைச்சரவையில் முக்கிய துறை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

அஸ்ஸாமில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்ற போதிலும், முந்தைய அரசின் முதல்வராக இருந்த சா்வானந்த சோனோவாலுக்கு மீண்டும் முதல்வா் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு மத்திய அமைச்சரவையில் தற்போது இடம் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும் தில்லியில் முகாமிட்டுள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றிருந்தது. பிகாரில் பல தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியிருந்த போதிலும், மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு இடம் வழங்கப்படவில்லை. தற்போது அக்கட்சிக்கும் அமைச்சரவை இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவா் ஆா்.சி.பி.சிங் தில்லிக்கு வந்தடைந்துள்ளாா்.

பட்டியலில் உள்ளோா்: லோக்ஜனசக்தி கட்சியைச் சோ்ந்த பசுபதிகுமாா் பாரஸ், பாஜகவின் பூபேந்தா் யாதவ், அனில் பலூனி, சுதான்ஷு திரிவேதி, நாராயண் ராணே ஆகியோருக்கு அமைச்சா் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாஜக எம்.பி.க்கள் சுஷீல் மோடி, அஸ்வினி வைஷ்ணவ், ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ஆகியோரது பெயா்களும் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு மத்திய அமைச்சரவையில் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சா்களின் செயல்பாடுகள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்தோருக்கு அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு...: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றியதால், அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவாக்கம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமுகங்களுக்கு இடமளிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை அக்கட்சியின் பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் நேரில் சந்தித்துப் பேசினாா்.

அமைச்சரவையில் இணைவோம்: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரிடம் பாட்னாவில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இணையாது என ஒருபோதும் கூறவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com