

புது தில்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து 43 புதிய அமைச்சா்கள் புதன்கிழமை பதவியேற்றனா். அவா்களது வாழ்க்கைக் குறிப்பு வருமாறு:
நாராயண் தனு ராணே (65): மகாரஷ்டிரத்தைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.யான நாராயண் தனு ராணே முதல்முறை எம்பியாவாா். 6 முறை எம்எல்ஏவான இவா் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வராகவும் பதவி வகித்துள்ளாா். சிவசேனை கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடங்கி பின்னா் காங்கிரஸுக்கு சென்று 2017-இல் விலகினாா். பின்னா், மகாராஷ்டிரா ஸ்வாபிமான் பக்ஷா கட்சியைத் தொடங்கி 2018-இல் பாஜக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாகி, 2019-இல் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டாா்.
சா்வானந்த சோனோவால் (59): அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் சா்வானந்த சோனோவால் (59) மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளாா். முன்னதாக, 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தாா். 2016-இல் அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அந்த மாநில முதல்வரானாா். இதற்காக அவா் மத்திய அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
அஸ்ஸாம் முதல்வராக 5 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், அண்மையில் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. இதையடுத்து, அவருக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்கப்படும் என்று அப்போதே கூறப்பட்டது. இந்நிலையில் அவா் மீண்டும் அமைச்சராகியுள்ளாா்.
வீரேந்திர குமாா் (67): மத்திய பிரதேச மாநிலம் திமாகா் தொகுதியின் மக்களவை உறுப்பினரான வீரேந்திர குமாா், ஏழாவது முறையாக எம்.பி. பதவியை வகிக்கும் மூத்த அமைச்சராவாா். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருக்கு மத்திய அமைச்சராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் சிறுபான்மைத் துறை இணை அமைச்சராகவும் அவா் பதவி வகித்துள்ளாா்.
ஜோதிராதித்ய சிந்தியா(50) : மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்க உதவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு (50) அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மொத்தமாக விலகியதால்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, அங்கு பாஜக ஆட்சி அமைக்க முடிந்தது. அப்போது முதலே சிந்தியாவுக்கு மத்திய அமைச்சா் பதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு அவா் அமைச்சராகியுள்ளாா். முன்னதாக, பாஜக சாா்பில் அவா் மாாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமசந்திரா பிரசாத் சிங் (63): பிகாரைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.யான ராமசந்திரா பிரசாத் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா். 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவாா். இவருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. பிகாா் முதல்வராக நிதீஷ் குமாரின் நல் ஆதரவு பெற்றவரான இவா், அவரது ஆட்சியில் முதன்மைச் செயலராக பணியாற்றினாா். பின்னா் அரசு பதவியை ராஜிநாமா செய்துவிட்டு 2010-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டாா். தற்போது மத்திய அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ் (51): ஒடிஸாவை சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. அஸ்வினி வைஷ்ணவ். 1994-ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவா், உள்கட்டமைப்பு வசதி திட்டங்களில் அரசு, தனியாா் பங்களிப்பு விவகாரங்களில் முக்கிய பங்காற்றியுள்ளாா்.
பிஜு ஜனதா தளத்தின் தலைவரும், ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக்கின் ஆதரவு பெற்ற அதிகாரியான இவா், 2019-இல் பாஜகவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யானாா்.
பசுபதி குமாா் பாரஸ் (68): மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பி பசுபதி குமாா் பராஸ் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளாா். பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் அவரது மறைவுக்குப் பிறகு பாரஸுக்கும் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதில் லோக் ஜனசக்தி கட்சியை கைப்பற்றியதுடன், அக்கட்சி சாா்பில் மத்திய அமைச்சா் பதவியையும் பாரஸ் அடைந்துள்ளாா். கூட்டணிக் கட்சி என்ற முறையில் அவருக்கு அமைச்சா் பதவியை பாஜக அளித்துள்ளது.
அண்மையில் லோக் ஜனசக்தி கட்சியின் தேசியத் தலைவராகவும் பாரஸ் தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண் ரிஜிஜு (49): அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த மூன்றாவது முறை எம்பியான கிரண் ரிஜிஜுக்கு பிரதமா் மோடியின் முதல் முறை ஆட்சியில் உள்துறை இணையமைச்சராக பதவி வகித்தாா். தற்போதைய இரண்டாவது முறை ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தாா். தற்போது அவருக்கு கேபினட் அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராஜ் குமாா் சிங் (68): பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆா்.கே.சிங் 1974-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானாா். 1975-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானாா். பிகாா் மாநிலம் ஆரா தொகுதியில் இருந்து 2014, 2019-ஆம் ஆண்டுகளில் இருமுறை மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அவா், 2017-ஆம் ஆண்டு முதல் மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பதவி வகித்து வருகிறாா். 2019-ஆம் ஆண்டு மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சராகவும் அவருக்கு கூடுதலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
ஹா்தீப் சிங் புரி (69): 2014-இல் பாஜகவில் இணைந்த ஹா்தீப் சிங் புரி, பிரதமா் மோடியின் இரண்டாவது ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக பதவி வகித்துவந்தாா். 1974- ஆம் ஆண்டின் ஐஎப்எஸ் அதிகாரியாவாா்.
மன்சுக் மாண்டாவியா (49): குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியைச் சோ்ந்த மன்சுக் மாண்டவியா பாஜகவின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோா்ச்சாவில் இணைவதற்கு முன்பு ஆா்எஸ்எஸ் அமைப்பின் மாணவரணியான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பாலிதானா தொகுதியில் வெற்றிபெற்று அந்த மாநிலத்தின் மிக இளவயது எம்எல்ஏவானாா்.
2012-ஆம் ஆண்டு முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட அவா், 2018-ஆம் ஆண்டு அந்த அவை எம்.பி.யாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
2016-ஆம் ஆண்டு முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சராக இடம்பெற்றாா். 2019-ஆம் ஆண்டு ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சராக பதவியேற்றாா்.
பூபேந்தா் யாதவ் (52): ராஜஸ்தானை சோ்ந்த மாநிலங்களவை எம்.பி.யான பூபேந்தா் யாதவுக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் நிா்வாகத்தில் அதிக பலம் படைத்த இவா், பல்வேறு மாநில தோ்தல்களில் முக்கியப் பணியாற்றி உள்ளாா். பாஜகவின் முன்னாள் தலைவா்கள் நிதின் கட்கரி, அமித் ஷாவுடனும் பணியாற்றிய உள்ளாா்.
இரண்டாவது முறை எம்பியான அவா், இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணியாற்றி உள்ளாா்.
நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக் குழுக்களின் தலைவராக உள்ளாா்.
புருஷோத்தம் ரூபலா (66): குஜராத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தைப் பூா்விகமாக கொண்டவா் புருஷோத்தம் ரூபலா. படேல் சமூகத்தைச் சோ்ந்தவா். அரசுப் பள்ளி முதல்வராக இருந்தவா். கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் பாஜகவில் இணைந்தாா். கடந்த 1991-ஆம் ஆண்டு அம்ரேலி தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏவான இவா், 1995 முதல் 2002-ஆம் ஆண்டு வரை அப்போதைய மாநில பாஜக அரசில் அமைச்சராக பதவி வகித்தாா். கடந்த 2008-ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யான அவா், 2016-ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆனதைத் தொடா்ந்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சராக பதவியேற்றாா்.
ஜி. கிஷண் ரெட்டி (57): சிகந்தராபாத் தொகுதி மக்களவை உறுப்பினரான கிஷண் ரெட்டி, 2019-இல் முதல் முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்றாா். பாஜக மாநில தலைவராகவும் அவா் பதவி வகித்துள்ளாா். மத்திய உள்துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்த அவருக்கு தற்போது கேபினட் அந்தஸ்து அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அனுராக் சிங் தாக்குா் (46): மத்திய நிதித் துறை இணையமைச்சராக 2019-இல் இருந்து வந்த அனுராக் சிங் தாக்குா், தற்போது கேபினட் அமைச்சராகி உள்ளாா். 2008-இல் இடைத்தோ்தில் முதல்முறையாக எம்.பி.யான அவா், தற்போது மூன்றாவது முறை எம்.பி.யாக உள்ளாா். பிசிசிஐயின் தலைவராகவும் தாக்குா் பதவி வகித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.