உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான கல்யாண் சிங்கிற்கு கடந்த 2 வாரங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் லக்னௌவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினமும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்னர் உடல்நலம் கருதி கல்யாண் சிங் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் முழு சுயநினைவோடு இல்லை என்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
கல்யாண் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்தியா முழுவதுமுள்ள மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். நேற்று ஜெ.பி.நட்டா, யோகி ஆதித்யநாத் இருவரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இன்று நான் கல்யாண் சிங்கின் பேரனுடன் பேசி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.
ஜெ.பி.நட்டாவுடன் பேசியபோது கல்யாண் சிங் என்னை நினைவுகூர்ந்தது தெரிய வந்தது. அவருடன் எனக்கு பல நினைவுகள் உள்ளன. அவருடனான அந்த நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்தேன். அவருடன் பேசுவது எப்போதுமே ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது' என்று பதிவிட்டுள்ளார்.