கரோனா இரண்டாம் அலை பாதிப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் யாரும் இறக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பதிலுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது நாட்டில் கரோனாவால் பலியானவர்களின் மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார், நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறந்ததாக மாநிலங்கள் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அதேசமயம் கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை பாதிப்பில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததைக் குறிப்பிட்டு பேசிய ப்ரவின் பவார் முதல் அலையில் 3095 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் தேவை இரண்டாவது அலையில் 9000 மெட்ரிக் டன்னாக அதிகரித்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர் தனது பதிலில், “சுகாதாரத்துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநிலங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என்பதை சுட்டிக்காட்டினார்.