‘பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை’: கமல்நாத்
பெகாசஸ் உளவு நிறுவனத்தின் மூலம் நாட்டில் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் உளவு நிறுவனமான பெகாசஸ் மூலம் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், தனிநபர் பாதுகாப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிய கமல்நாத் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒப்புதலுடன் இந்த விவகாரத்தில் நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.