பெகாசஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ள நிலையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு இதுகுறித்து விவாதிக்கவுள்ளது.
பெகாசஸ் மென்பொருள் மூலம் உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டதாக தி வயர் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் எண்கள் மூலம் அவர்களை வேவு பார்க்க இஸ்ரேலின் என்எஸ்ஒ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளை விற்றது தெரியவந்துள்ளது. ஆனால், அரசுகளுக்கு மட்டுமே மென்பொருள் விற்கப்பட்டதாக என்எஸ்ஒ நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரம் குறித்து மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 28ஆம் தேதி விவாதிக்கவுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், குடிமக்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, உள்துறை, தொடர்புதுறை ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.