பெகாஸஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 'பெகாஸஸ்' உளவு மென்பொருள் மூலமாக நாட்டின் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள், பெகாஸஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
இஸ்ரேலின் உளவு மென்பொருள் மூலமாக குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்.
எனது செல்போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது எனது தனிப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. ஏராளமான இந்தியர்களின் தனிப்பட்ட ரகசியங்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல். பிரதமருக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ரஃபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ரஃபேல் விசாரணையைத் தடுக்கவே பெகாஸஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாரை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பிரதமர் நினைக்கிறார். ஆனால், முடியாது என்பதே நிதர்சனம் என்று தெரிவித்தார்.