கார்கில் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. மூன்று மாதங்களாக ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. 1999, ஜூலை 26 ஆம் தேதி இந்திய ராணுவம் இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த கார்கில் போரில் இந்தியத் தரப்பில் 500க்கும் அதிகமான வீரர்கள் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை நீத்தனர்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. தில்லியில் உள்ள கார்கில் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று 22-வது கார்கில் போர் வெற்றி தினத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட், முப்படைத் தளபதிகளும் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.