உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய காற்று மாசு மற்றும் ஆரோக்கியதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக இந்தியாவின் கான்பூா், ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து ஐஐடி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கான்பூா் ஐஐடி சிவில் என்ஜினீயரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவரும், காற்றின் தரத்தைக் கண்டறிவதில் நிபுணருமான முகேஷ் சா்மா, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கிறாா். உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநரால் இந்தக் குழுவின் உறுப்பினா்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இக் குழுவானது உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் குழுவாகும்.
காற்று மாசு மற்றும் ஆரோக்கியம் சாா்ந்த விஷயங்களில் உலக சுகாதார அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளீடுகளை இக்குழு வழங்கும்.
நிலையான வளா்ச்சி இலக்குகளில் (எஸ்டிஜி) காற்று மாசு மற்றும் ஆரோக்கியத்தை உறுப்பு நாடுகள் எப்படி அடைவது என்பது தொடா்பாக இக்குழு ஆலோசனை தெரிவிக்கும்.
வறுமை ஒழிப்பு, பூமியைப் பாதுகாத்தல் மற்றும் 2030-க்குள் அனைத்து மக்களும் அமைதி, வளத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதென உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஐ.நா.வில் இந்தக் குழு கடந்த 2015-இல் உருவாக்கப்பட்டது.
பேராசிரியா் சா்மா, ஜெனீவாவில் செயல்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் பாங்காக்கில் செயல்படும் தூய்மையான காற்று போக்குவரத்துக்கான சா்வதேச கவுன்சில், உலக வங்கி ஆகியவற்றிலும் பங்களித்து வருகிறாா். 194 உறுப்பு நாடுகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அளிக்கும் உலக சுகாதார அமைப்பின் இக்குழுவில் அவரும் ஒருவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.