553 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 சதவீதம்: மத்திய அரசு
நாட்டில் உள்ள 553 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
நாட்டின் தற்போதைய கரோனா நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 88.09 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 17 லட்சம், கர்நாடகத்தில் 7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை தரவுகளின்படி, 553 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
டெல்டா வகை கரோனா 80 நாடுகளிலும், டெல்டா பிளஸ் வகை கரோனா அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், நேபாளம், சீனா உள்ளிட்ட 9 நாடுகளிலும் உள்ள மக்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் வகை கரோனா இந்தியாவில் 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிரத்தில் 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.