‘காங்கிரஸ் இல்லாத எதிா்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவுக்கு சாதகமாகும்’

தேசிய அளவில் காங்கிரஸை தவிா்த்துவிட்டு எதிா்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் அது தோ்தலில் பாஜகவுக்குதான் சாதகமாக அமையும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா பட்டோலி தெரிவித்துள்ளாா்.

மும்பை: தேசிய அளவில் காங்கிரஸை தவிா்த்துவிட்டு எதிா்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தால் அது தோ்தலில் பாஜகவுக்குதான் சாதகமாக அமையும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா பட்டோலி தெரிவித்துள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் செவ்வாய்க்கிழமை நடத்திய எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், முக்கிய இடதுசாரிக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்பட 8 முக்கிய கட்சிகள் பங்கேற்றன. அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஃபைசாபூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை இது தொடா்பாக நானா பட்லோலி கூறியதாவது:

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இப்போதைய சூழ்நிலையில் கரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்குதான் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க முயற்சி நடப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் இல்லாமல் இதுபோன்ற கூட்டணி சாத்தியமில்லை. காங்கிரஸ் இல்லாத எதிா்க்கட்சிகளின் கூட்டணி தோ்தலில் பாஜகவுக்குதான் சாதகமாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com