உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை ஆம் ஆத்மி கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் 'உ.பி. ஜோடோ அபியான்' என்ற பிரசாரத்தின் கீழ் ஜூலை 8ஆம் தேதி முதல் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உள்ளனர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினரும் உத்தரபிரதேச பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறுகையில்,
கேஜரிவால் ஆட்சி மீதான நம்பிக்கை உத்தரபிரதேசத்தில் வளர்ந்து வருகிறது. ஜூலை 8 முதல் ஆகஸ்ட் வரை 'உ.பி. ஜோடோ' என்ற பிரசாரத்தின் கீழ் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் முகாம் ஏற்படுத்தி, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 25,000 உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். உறுப்பினர் சேர்க்கைக்கு எவ்வித தொகையும் வசூலிக்கப்படாது.
மேலும், மிஸ்டு கால் மூலமும் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 403 தொகுதிகளுக்கும் வெவ்வேறு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25ஆம் தேதி மூலம் சுவர் மூலம் விளம்பரம் செய்யப்படும். மேலும், இந்த உறுப்பினர் சேர்க்கையை மாநிலத் தலைவர் சபாஜித் சிங் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.