கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து நீக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றின் முதல் அலையைத் தொடர்ந்து தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் முதலில் ரெம்டெசிவிர் முக்கிய இடம்பெற்றிருந்தது. கரோனா பரவல், சிகிச்சை முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல அறிவுரைகளை வழங்கிவந்தது. உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளையே பெரும்பாலான நாடுகள் கடைப்பிடித்து வந்தன.
கரோனா இரண்டாவது அலையில் பெரும்பாலான நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைஅடுத்து அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அதிகம் தேவைப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்தினால் பெரிதாக எந்த பயனும் இல்லை, அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்த நிலையிலும் ரெம்டெசிவிருக்கான தேவை அதிகரித்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தற்போது கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தினை நீக்கியுள்ளது. முன்னதாக கடந்த சில மாதங்களாகவே கரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.