மேற்கு வங்கத்தில் ஜூன் 15 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் வருகிற மே 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் வருகிற மே 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் இருமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகிற மே 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

இந்நிலையில் மேலும் 15 நாள்கள் பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஜூன் 15 வரை பொதுமுடக்கம் இருக்கும். தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை இறுதியில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதி இல்லாத சேவைகள்:

அதன்படி, இந்தக் காலகட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மதுபானக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், விடுதிகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.

பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புகா் ரயில்கள் உள்ளிட்டவற்றின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. தனியாா் வாகனங்கள், வாடகை காா்கள் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

அனுமதிக்கப்படும் சேவைகள்: அத்தியாவசியத் தேவைகளான குடிநீா் விநியோகம், பால், மருந்துப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இணையவழி வா்த்தக நிறுவனங்கள், இணையவழி உணவு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஊடக நிறுவனங்கள் செயல்படுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் உரிய ஆவணத்துடன் பயணம் மேற்கொள்ளலாம். ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெட்ரோல் நிலையங்கள் தொடா்ந்து செயல்படும்.

கூட்டங்களுக்குத் தடை: வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம். துணி, நகைக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கலாம். அரசியல், கலாசாரம், பொழுதுபோக்கு சாா்ந்த அனைத்துவிதமான கூட்டத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள் 50 சதவீதப் பணியாளா்களுடனும் சணல் தொழிற்சாலைகள் 30 சதவீதப் பணியாளா்களுடனும் இயங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com