ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு ஜூன் 20-க்குப் பிறகு தில்லி வரவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் பத்திரிகையாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிறகு கேஜரிவால் செய்தியாளர்களிடம் கூறியது:
"பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பத்திரிகையாளர்களுக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து பத்திரிகையாளர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி மூலம் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தொகுப்பு ஜூன் 20-க்குப் பிறகு சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தடுப்பூசியின் தயாரிப்பு ஆகஸ்டில் தொடங்கவுள்ளது" என்றார் அவர்.