உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த அக். 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வந்த இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின் அடுத்தடுத்து 3 பேருக்கு ஜிகா பாதித்திருந்தது கண்டறியப்பட்டது.
தற்போது அதே மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் விமானப்படை பகுதியைச் சுற்றி இருப்பவர்கள் என மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | தில்லியில் பள்ளிகள் திறப்பு: 50% மாணவர்களுடன் வகுப்புகள் தொடக்கம்
அதிகப்படியான காய்ச்சல் , உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்தவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த , பணியாற்றியவர்கள் என 645 பேருக்கு மேல் ரத்த மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் வீடுகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொற்றுக்கு ஆளானவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.