பிரபல மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸின் நிகழ்ச்சிக்கு மத்தியப் பிரதேசத்தில் அனுமதியில்லை என பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
'ஐ கேம் ஃப்ரம் டூ இந்தியாஸ்' என்ற பெயரில் பிரபல மேடை நகைச்சுவையாளரான வீர் தாஸ், வெளியிட்ட விடியோ சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. வாஷிங்டன் கென்னடி மையத்தில் நடைபெற்ற தனது நிகழ்ச்சியின் விடியோவை வீர் தாஸ் திங்கள்கிழமை பகிர்ந்துள்ளார்.
அந்த ஆறு நிமிட விடியோவில், இந்தியாவின் இரு வேறு முகங்கள் குறித்து விளக்கியுள்ள வீர் தாஸ், பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பற்றி விரிவாக பேசியுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டை சிறுமைப்படுத்தியதாக வீர் தாஸ் மீது தில்லி காவல்துறையினரிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் வீர் தாஸை மத்தியப் பிரதேசத்தில் அனுமதிக்கப் போவதில்லை என பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும் வெளிநாடுகளில் சொந்த நாட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வீர் தாஸ் மன்னிப்பு கேட்டால் மேற்கொண்டு ஆலோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.