பாஜக அரசு ஏற்படுத்திய இன்னல்களுக்கு மத்தியில் ஓயாது போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய அறப்போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடிவந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு மூலமாக போராட்டத்திற்கு முடிவு கிடைத்துள்ளது.
இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜக உங்களுக்கு ஏற்படுத்திய இன்னல்களை கண்டு சோர்வடையாமல் ஓயாது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது முழுக்க உங்களுடைய வெற்றி. இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரிய விவசாயிகளை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | முடிவுக்கு வந்த விவசாயிகளின் அறப்போராட்டம்! - ஒரு விரிவான பார்வை