உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் 3 நாள்கள் நடைபெற்ற டி.ஜி.பி., ஐ.ஜி.க்கள் மாநாட்டின் இறுதி நாளில், மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதன் காரணமாக ஐ.ஜி.க்கள் மாநாட்டின் இறுதி நாளில் பிரதமா் மோடியுடன் அமைச்சா் அஜய் மிஸ்ரா பங்கேற்காமல் தவிா்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசும், பிரதமா் மோடியும் ட்விட்டரில் வெளியிட்ட மாநாட்டின் இறுதிநாள் புகைப்படத்திலும் அவா் இல்லை.
அதேவேளையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் முதல் நாள் அமா்வில் உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன், அஜய் மிஸ்ரா மேடையில் அமா்ந்திருந்தாா். சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலும் அவா் பங்கேற்றாா்.
இந்நிலையில், மாநாட்டின் இறுதிநாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிா்ந்த காங்கிரஸ், அதில் அஜய் மிஸ்ரா இடம்பெறாததை சுட்டிக்காட்டி, ‘‘சட்டப் பேரவைத் தோ்தல்களில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவுவோம் என பிரதமா் மோடி அஞ்சுகிறாரா?’’ என கேள்வி எழுப்பியுள்ளது.