ஒமைக்ரான் எனும் புதிய வகை கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவை மத்திய அரசு பரிசீலனை செய்யவுள்ளது.
கரோனா பாதிப்பைத் தொடர்ந்து, சர்வதேச விமான சேவைக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இந்தியா தடை விதித்திருந்தது. இருந்தபோதும், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட பயணிகளைத் தாயகம் அழைத்து வருவது உள்ளிட்ட மிக அத்தியாவசியத் தேவைகளுக்காக 28 நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களைக் கடந்தாண்டு ஜூன் முதல் இந்தியா இயக்கி வருகிறது.
இதையடுத்து, கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு திட்டமிட்டப்பட்ட வணிக ரீதியிலான சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதையும் படிக்க | பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) விகே பால், பிரதமருக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் மற்றும் சுகாதாரத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் மற்ற அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஒமைக்ரான் எனும் புதிய வகை கரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.