மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் அப்பாவி என்றும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் முன்பு நாளை ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்றும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவால் இன்று ஆஜராக முடியவில்லை என்றும் அஜய் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். லக்னெள விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், "சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
என் மகன் குற்றமற்றவன். வியாழக்கிழமை அவருக்கு நோட்டீஸ் வந்தது. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறினார். அவர் குற்றமற்றவர் என்பதால் நாளை காவல்துறையினர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை அளிப்பார்" என்றார்.
நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "எதிர்க்கட்சிகள் எதை வேண்டினாலும் கேட்பார்கள். இது பாரபட்சமற்ற முறையில் செயல்படும் பாஜக அரசு. குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என பதிலளித்தார்.
லக்கிம்பூர் சம்பவம் குறித்த விசாரணையில் கலந்து கொள்ள ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து, இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய பேரணியில் காா் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்கியதில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் காா் ஓட்டுநா், 2 பாஜக தொண்டா்கள் உயிரிழந்தனா். சம்பவத்தின்போது சென்ற காரில் அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.