அரசு முறை இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தனது கணவருடன் சென்று பார்வையிட்டார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் சனிக்கிழமை இந்தியா வந்தார். அவரை விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் டென்மார்க் பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மெட்டே ஃபிரட்ரிக்சென் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை டென்மார்க் பிரதமர் இன்று தனது கணவர் போ டெங் பெர்க்குவுடன் சென்று பார்வையிட்டார். முன்னதாக தாஜ்மஹாலை பார்வையிட டென்மார்க் பிரதமர் மெட்டே நேற்றிரவே ஆக்ரா சென்றடைந்தார்.
விமான நிலையித்தில் இருந்து அவரை, உ.பி. அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தகக்து.