புதுதில்லி: புதிய 7 பாதுகாப்பு நிறுவங்களை இன்று வெள்ளிக்கிழமை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்தும் வகையில் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 7 நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட், ஆர்மட் வெஹிகல்ஸ் நிகம் லிமிடெட், அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் மற்றும் எகியூப்மென்ட் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், யந்த்ரா இந்தியா லிமிடெட், இந்தியா ஆப்டெல் லிமிடெட் மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய புதிய 7 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயல்திறன் மற்றும் புதிய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை இந்த புதிய 7 நிறுவனங்களும் முன்னெடுத்து செல்லவுள்ளன.
இந்தநிலையில் இந்த புதிய 7 நிறுவனங்களையும் விஜயதசமி நாளான இன்று மதியம் 12.10 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.