சொகுசு கப்பல் விவகாரத்தில் தினம் தினம் திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தை நடத்த போதை பொருளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஏற்பாட்டாளர்கள் மத்திய அரசிடமிருந்து நேரடியாக அனுமதி வாங்கியுள்ளனர் என மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மாநில காவல்துறையினரிடமிருந்தோ மாநில உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அனுமதி வாங்கவில்லை என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "போதை பொருள் சிக்கிய சொகுசு கப்பலில் சர்வதேச போதை பொருள் கும்பலை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இருந்திருக்கிறார்.
கப்பலில் சோதனை நடத்தப்பட்டபோது மற்றவர்கள் கைதான நிலையில், அவருக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை
இந்த வழக்கை விசாரித்துவரும் போதை தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே அரசு வேலை வாங்குவதற்காக பொய்யான ஆவணங்களை சமர்பித்தாக நான் முன்னரே கூறியிருந்தேன். அது பொய்யாக இருந்தால், நான் அமைச்சர் பொறுப்பை ராஜிநாமா செய்வேன். அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுவிடுவேன்.
மும்பை கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அவா்கள் மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கையே பொய்யான வழக்கு எனக் கூறிவரும் நவாப் மாலிக், சோதனையை தலைமை தாங்கி நடத்திய சமீர் வான்கடே மீது தொடர் குற்றச்சாட்டுகளை மேற்கொண்டுவருகிறார். "தில்லியிலிருந்து போதை தடுப்பு பிரிவு அலுவலர்களின் உயர்மட்ட குழு இங்கு வந்திருப்பதாக நான் நம்புகிறேன்.
போதை தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே, கே. பி. கோசாவி, பிரபாகர் சைல் ஆகிய சாட்சியினர் மற்றும் வான்கடேவின் டிரைவர் மானே உள்ளிட்டோரின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பு குறித்த விவர பதிவுகளை அவர்கள் சோதனை செய்ய வேண்டும். உங்களுக்கு வாக்குமூலங்கள் தேவையில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் அந்த தொலைபேசி அழைப்புகள் விளக்கமாக அமையும்" என்றார்.