மக்களின் தீர்ப்பை திரிணமூல் காங்கிரஸ் மதிக்கவில்லை என மம்தா பானர்ஜிக்கு எதிராக பவானிபூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரூவால் வெள்ளிக்கிழமை விமரிசித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பவானிப்பூர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா களமிறங்குகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பிரியங்கா பேசுகையில்,
“எனக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் மம்தா பானர்ஜி, ஏற்கனவே தேர்தலில் தோற்றுள்ளார், அதனால் தான் பவானிப்பூரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் ஏற்கனவே பவானிப்பூரில் வெற்றி பெற்றது. ஆனால், ஜனநாயகத்தையும், மக்களின் வாக்கையும் அவர்கள் மதிக்கவில்லை.
திரிணமூலிலிருந்து மக்கள் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். ஆனால், மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்காக அவர் ராஜிநாமா செய்துள்ளார். இதுதான் இங்குள்ள ஜனநாயகம்.”