குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை முதல்வர் நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர்.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
"எம்எல்ஏ-க்கள் அனைவரும் சனிக்கிழமை இரவுக்குள் காந்திநகர் வர உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் குறித்த முடிவு எம்எல்ஏ-க்களுடனான கூட்டத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | மூன்று மாதங்களில் மூன்று பாஜக முதல்வர்கள் ராஜிநாமா!
நிதின் படேல், மன்சுக் மாண்டவியா, சிஆர் பாட்டில், அமைச்சர் ஆர்சி பால்டு மற்றும் மாநில பாஜக துணைத் தலைவர் கோர்தன் ஸடாபியா ஆகியோர் அடுத்த முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது."
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். குஜராத்தின் வளர்ச்சிப் பயணம் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் புதிய தலைமையின் கீழ் தொடர வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.