
ஆட்டோமொபைல் துறையில் மின் மற்றும் ஹைட்ரஜன் எரிவாயு வாகனங்களின் உற்பத்தியை பெருக்க 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், 7.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, 57,043 கோடி ரூபாய் மதிப்பில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு ஐந்தாண்டுகால திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், மின் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிவாயு வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதாகக் கூறி திட்டத்தின் மதிப்பை 25,938 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
மின்னணு ஆற்றல் திசைமாற்றி அமைப்பு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அசெம்பிளி, சென்சார்கள், சன்ரூஃப்ஸ், சூப்பர் கேபாசிட்டர்கள், தகவமைப்பு முன் விளக்கு, சக்கர அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, தானியங்கி பிரேக்கிங், மோதல் எச்சரிக்கை அமைப்பு ஆகிய உதிரி பாகங்கள் இத்திட்டத்தின் கீழ் வரவுள்ளது.
2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 13 துறைகளுக்கு மொத்தமாக 1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாகவே, தற்போது ஆட்டோமொபைல் துறைக்கு ஊக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஊக்க திட்டம் போட்டித்தன்மையை அதிகரித்து துறையின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.