புது தில்லி: கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.
மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடி. இது கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1,23,902 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.22,973 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.29,329 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.62,842 கோடி. ரூ.8,757 கோடி செஸ் வரி வசூலாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகம். ஆனால், கடந்த மார்ச் மாதம் 27 சதவீதம் அதிகமான ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.