மகாராஷ்டிரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 7 கரோனா நோயாளிகள் ஒரேநேரத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை நாலசோபரா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வயது மற்றும் இணை நோய் பாதிப்பு காரணமாக அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தோரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் மோசமான நிர்வாகமே உயிரிழப்புக்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், மருத்துவமனை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு அதிகாலை 3 மணிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதி கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் மருத்துவமனைக்கு எதிராக சம்மந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் விசாரணை நடத்தப்படும் என்று மூத்த காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திர காம்ப்ளே தெரிவித்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் 5.300 புதிய படுக்கைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் இவற்றில் குறைந்தது 70 சதவீத படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதியும் மற்றவைகளுக்கு ஐ.சி.யு அல்லது வென்டிலேட்டர் வசதியும் இருக்கும் என்று மாநில அமைச்சர் அஸ்லாம் ஷைக் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 258 பேர் உயிரிழந்துள்ளனர்.