புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ஆம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
மத்திய கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்புத் தெரிவித்துள்ளார். மத்திய கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பினால், மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகப்பெரிய நிம்மதியை அடைவார்கள் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேஜரிவால் மத்திய அரசுக்கு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவம் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 144 தடை உத்தரவும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.