அமிருதசரஸ்: பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி வந்த புறாவின் உடலில் துண்டு காகிதத்தில் ஒரு செல்லிடப்பேசி எண் இருந்த சம்பவத்தில் புறா மீது வழக்குப் பதிவு செய்ய எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புறா மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் பஞ்சாப் காவல்துறை ஆலோசனைக் கேட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த புறா ஒன்று, ரோராவாலா பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் தோளில் வந்து அமர்ந்தது.
அந்த புறாவின் காலில் ஒரு சிறு துண்டு காகிதமும், அதில் ஒரு செல்லிடப்பேசி எண்ணும் இருந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த புறா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, புகாரும் அளிக்கப்பட்டது. அந்தப் புறா மீது வழக்குப் பதிவு செய்ய பிஎஸ்எஃப் வலியுறுத்தி வருகிறது.
புறா ஒரு பறவை என்பதால், அதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து பஞ்சாப் காவல்துறை சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
புறாவின் காலில் இருந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கங்கார்ஹ் காவல்நிலையத்தில் அந்தப் புறா வைக்கப்பட்டுள்ளது.