கரோனா தொற்று பரவல் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ஐனாக்ஸ் ஏர் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் ஜெயின் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறையான சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐனாக்ஸ் ஏர் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் கெயின் ஆக்சிஜன் உற்பத்தியாகும் இடத்திற்கும் பற்றாக்குறை நிலவும் இடத்திற்கும் இடையேயான இடைவெளியை நிரப்புவதில் உள்ள சிக்கலே ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள சித்தார்த் ஜெயின் தற்போதைய ஆக்சிஜன் உற்பத்தி திறன் போதுமான அளவு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய சூழலில் நாட்டின் ஒருநாள் ஆக்சிஜன் தேவை என்பது 5000 மெட்ரிக் டன் உள்ள நிலையில் உற்பத்தியானது 7200 மெட்ரிக் டன் அளவு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஆக்சிஜன் உற்பத்தியாகும் இடத்தையும், பற்றாக்குறை நிலவும் பகுதிகளையும் இணைப்பதில் நிலவும் சிக்கலே ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு காரணம் என சித்தார்த் ஜெயின் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆகிசிஜன் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து ரயில்வே மூலம் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் நிலைமையை சமாளிக்க முடியும் என்றாலும் தினசரி பாதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடக்கும் போது சிக்கல் ஏற்படும் என சித்தார்த் ஜெயின் எச்சரித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆக்சிஜன் கோரப்படுவதால் தற்போதைக்கு ஆக்சிஜனை சார்ந்து நடைபெற்று வரும் தொழில்நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்றாலும் அவை தற்காலிக பாதிப்புகளே என அவர் மேலும் தெரிவித்தார்.