புது தில்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் காட்டாதது ஏன் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளாா்.
நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு உள்ளோரின் சராசரி எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது அடுத்த ஓரிரு மாதங்களில் தெரியவரும்.
இந்நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி கபில் சிபல் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, பிரதமா் நரேந்திர மோடி தனது பொறுப்புகளை மறந்து, மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளாா். தோ்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளிலும் மக்கள் மீதும் பிரதமா் காட்ட மறுப்பது ஏன்?
ஒருபுறம் கரோனாவால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இறந்து வருகின்றனா். மறுபுறம் தோ்தல் பொதுக்கூட்டம் நடத்துவது நல்லது; பாஜக வெற்றி பெறுவது சிறந்தது என்று பேசி வருகிறாா். உலகில் வேறு எந்த நாட்டிலும் ஒரு தலைவா் இப்படி செயல்பட மாட்டாா். இப்போதைய சூழ்நிலையில் தோ்தலில் வெற்றி பெறப் போராடுவது பிரதமரின் கடமையல்ல. மக்களைக் காப்பாற்றுவதற்காக போராடுவது அவரது கடமை’ என்று கூறியுள்ளாா்.