ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா, 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார்.
ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தள் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா நேற்று (புதன்கிழமை) பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதினார். சிர்சாவில் உள்ள ஆர்யா கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் அவர் தேர்வை எழுதினார்.
எலும்பு முறிவின் காரணமாக தனக்கு பதில் வேறொருவர் எழுத அவர் அனுமதி கேட்டிருந்தார். பின்னர், எழுத்தாளர் ஒருவரின் உதவியோடு 2 மணி நேரத்தில் அவர் தேர்வை முடித்தார்.
முன்னதாக, ஹரியானா திறந்தவெளி வாரியம் நடத்திய 12ஆம் வகுப்பு தேர்வில் செளதாலா கலந்து கொண்டார். கட்டாய 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதாத காரணத்தால் அவரின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடப்படவில்லை.
இதன்காரணமாகவே, பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வை அவர் எழுதினார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவந்த செளதாலா பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தை தவிர மற்ற தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தார். ஆனால், 12ஆம் வகுப்பு தேர்வில் செளதாலா தேர்ச்சி அடைந்ததாக அவரின் மகன் அபய் செளதாலா தெரிவித்தார்.
10ஆம் வகுப்பில்தான் செளதாலா தேர்ச்சி அடைந்ததாக தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் விளக்கம் அளித்தது. தில்லியில் உள்ள திகார் சிறையில் இருந்தபோது, ஆங்கில தேர்வுக்காக அவர் பயின்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்தவந்த அவர், கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.