பாட்னா: ஜார்க்கண்ட் மாநிலம் பாட்னா அருகே கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றவர், பாம்பை கழுத்தில் மாலையாகச் சுற்றியதில், பாம்பு கடித்து பலியானார்.
கோயிலில் சாமி கும்பிட வீட்டிலிருந்து புறப்பட்ட ருனியா தேவி, வழியில் பாம்பை பார்த்து, அது கடவுள் அனுப்பிய தூதர் என நினைத்துக் கொண்டார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, பாம்புக்கு தீபாராதனைகள் காட்டி, அதனை ஏதோ மலர் மாலை போல எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினரும் பக்தி பரவசத்தோடு, பூஜைகளை நடத்தினர். சாமி பாடல்களைப் பாடியும் நடனமாடியும் கிராமத்தினர் பக்தி பரவசத்தில் ஆழந்திருந்தபோது, அந்த பாம்பு, ருனியாவைக் கொத்திவிட்டது.
விஷம் உடல் முழுக்க பரவ, மயங்கி விழுந்த ருனியாவை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அந்த கிராமத்திலிருந்த மந்திரவாதியிடம் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த மந்திரவாதியும் கிராமத்தில் இல்லாததால், வேறு வழியே இல்லாமல் ருனியா தேவி உயிரைவிட்டுள்ளார்.
அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.