பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்வது எனது கனவு என்று உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமார் தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் ஆடவா் உயரம் தாண்டுதலில் டி47 பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமாா் 2.06 மீ தூரம் குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்
மேலும் அவா் புதிய ஆசிய சாதனையையும் படைத்தாா். தான் பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா் நிஷாத்.
இந்நிலையில் இந்தியா வந்த அவரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேரில் அழைத்து பாராட்டினார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நிஷித் பிரமானிக்கும் உடன் இருந்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிஷாத் குமார், பாராலிம்பிக்கில் வென்ற பதக்கம் எனக்கு மிகவும் முக்கியமானது. பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.
ஹிமாசலில் விளையாட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமத்திலிருந்து பங்கேற்றேன். எனது பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது. எனினும் அதனைக் கடந்து வந்தது பெருமையடையச் செய்கிறது.
அரசிடம் இருந்து எனக்கு உதவிகள் கிடைத்தன. உபகரணங்களுக்கும், பயிற்சிக்கும், உணவிற்கும் எனக்கு போதிய உதவிகள் கிடைத்தன. இளைஞர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதில் நூறு சதவிகிதம் உங்கள் உழைப்பை செலுத்துங்கள் என்று கூறினார்.