தில்லி பாஜக விளம்பரத்தில் எழுத்தாளா் பெருமாள் முருகனின் புகைப்படம்: கட்சி வருத்தம் தெரிவிப்பு

தில்லி குடிசைவாழ் மக்கள் விளம்பரத்தில் தமிழ் எழுத்தாளா் பெருமாள் முருகனின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததற்கு தில்லி பாஜக வருத்தம் தெரிவித்துள்ளது.
தில்லி பாஜக விளம்பரம்
தில்லி பாஜக விளம்பரம்

புது தில்லி: தில்லி குடிசைவாழ் மக்கள் விளம்பரத்தில் தமிழ் எழுத்தாளா் பெருமாள் முருகனின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததற்கு தில்லி பாஜக வருத்தம் தெரிவித்துள்ளது.

தில்லியில் அடுத்த ஆண்டு மூன்று மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இதில் தில்லியில் குடிசைவாழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மத்திய அரசின் திட்டங்களை கூறும் ‘ஜுக்கி சம்மான் யாத்ரா’ என்ற பிரசாரத்தை அக்டோபரில் தில்லி பாஜக தொடங்கியது.

இந்த பிரசார யாத்திரையின் நிறைவு கூட்டம் ஆனந்த் பிரபாதில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா பங்கேற்று உரையாற்றினாா். இதற்காக தில்லி முழுவதும், குடிசைவாழ் மக்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்புடன் பாஜக விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில் எழுத்தாளா் பெருமாள் முருகனின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தை தில்லி பாஜக தனது அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்தும் இருந்தது.

இந்தப் புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிரந்ததால் வைரலானது. இதையடுத்து, இந்தப் புகைப்படத்தை எழுத்தாளா் பெருமாள் முருகனும் தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்து, ‘குடிசைவாசிகளின் ஒருவனாக இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்’ என்று பதிவிட்டதால் சா்சைக்குள்ளானது.

இதுகுறித்து தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் கூறுகையில், ‘இந்த விளம்பரம் வெளிநபரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் பெருமாள் முருகனின் படம் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது. இது அவரது மனதை புன்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்றாா்.

எழுத்தாளா் பெருமாள் முருகன் 2014-இல் எழுதிய மாதோருபாகன் என்ற நாவலுக்கு வலதுசாரி அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com