விவசாயிகளுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று சிரோமணி அகாலி தள கட்சியின் எம்பி ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இன்று வெற்றி பெற்ற விவசாயிகளை வாழ்த்துகிறேன். ஆனால், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு நீடித்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளுக்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்றார்.
முன்னதாக மத்திய அரசுக் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சிரோமணி அகாலி தளம் கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- தேஜாஸ் விமான விபத்தை தவிர்த்ததற்காக விருது பெற்றவர் வருண் சிங்
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரதமர் நரேந்திரமோடி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெறப்பட்டது.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதற்காக விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ள நிலையில் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி டிசம்பர் 11ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளதாகவும், ஜனவரி 15ஆம் தேதி விவசாயிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.