
தோழியை கரம் பிடித்த தேஜஸ்வி யாதவ்
பிகார் மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன்களிலேயே இளைய மகனும் அவரது அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவுக்குதான் திருமணமாகாமல் இருந்தது.
இந்நிலையில், தனது நீண்ட நாள் தோழியை அவர் கரம் பிடித்துள்ளார். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேஜஸ்வியின் சகோதரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புதுமண தம்பதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து தெரிவித்த லாலுவின் மகள் ரோஹினி, "வாழ்நாள் முழுவதும் மகழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு, அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் பல குடும்ப உறுப்பினர்களுடன் முன்னிலையில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏழு மகள்கள், இரண்டு மகன்கள் என லாலுவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அதில், இளையவரே தேஜஸ்வி. லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப், தனியாக வாழ்ந்துவருகிறார். சகோதரர் தேஜஸ்வியின் திருமண புகைப்படங்கள் சிலவற்றை தேஜ் பிரதாப்பும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற பிகார் மாநில தேர்தலில், கடுமையான போட்டிக்கு மத்தியில் நூலிழையிலேயே ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, தேஜஸ்வி தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் தவறவிட்டது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று அதிகிரித்துவரும் நிலையில், கூட்டத்தை தவிர்க்கவே, ஒரு சிலர் மட்டும் திருமண நிகழச்சிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...