நாகாலாந்தின், மோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் கிராமத்தில், ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பத்தினரும், சம்பவத்துக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும்வரை அரசு வழங்கும் எந்த நஷ்ட ஈட்டையும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஓடிங் கிராம நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிசம்பர் 5ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் இறுதிச் சடங்குகளை செய்யும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, மாநில அமைச்சர், பலியானோர் குடும்பத்துக்கு ரூ.18.30 லட்சத்தை வழங்கினார். அது அவர் தனிப்பட்ட அன்பின் காரணமாக கொடுக்கப்ட்டது என்று நினைத்தோம். பிறகுதான், அது அரசு அறிவித்த நஷ்ட ஈட்டின் முதல்கட்ட தவணை என்பது தெரிய வந்தது.
சம்பவத்துக்குக் காரணமான இந்திய ராணுவப் படையின் 21வது துணை காமாண்டோவைச் சேர்ந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், ஒட்டுமொத்த கிழக்குப் பகுதியிலிருந்தும், ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அதுவரை அரசின் எந்த நிதியுதவியும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (காப்லாங்) என்ற தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களை தேடும் பணியில் ராணுவத்தினா் டிசம்பர் முதல் வாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்களுடன் வந்த வாகனத்தை தீவிரவாதிகளின் வாகனம் என்று கருதி ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் தொழிலாளா்கள் 6 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின் தொடா்ச்சியாக அடுத்த நாள் துணை ராணுவப் படையான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவுடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பிரிவினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.