எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மாநிலங்களவை கூடியவுடன் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யாமல் அரசு பிடிவாதமாக உள்ளது. இதுதான் அவை நடவடிக்கையின் போது அமளியில் ஈடுபட எங்களை தூண்டுகிறது. இதனால் தான் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்”
இதையும் படிக்க | நாடாளுமன்ற தாக்குதல் நாள்: எம்.பி.க்கள் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தவுடன் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு பேசியதாவது, “அவையை இப்படிதான் நடத்துவதா? இவ்வாறு அவை நடைபெற நான் விரும்பவில்லை. பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைக்கிறேன் என்றார்”.
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.