வருகின்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் பல்வேறு அழிவுகள் நிகழ்ந்து வரும் சூழலில் உலக நாடுகள் மத்தியில் அன்றாட பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து ஆதித்ய தாக்கரே பேசியதாவது:
“வருகின்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் விவாதிக்கப்படும். காலநிலை மாற்றம் என்பது மும்பை அல்லது மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.
காலநிலை மாற்றம் ஏற்பட்டால் உலக நாடுகளைவிட மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள இந்தியாவுக்கு தான் அதிக பிரச்னை ஏற்படும். அரசியல் நிகழ்வுகளில் காலநிலை பேசு பொருளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பசுமை பாடத்திட்டத்தை கல்வித்துறைக்கு அளித்துள்ளோம். இது பசுமை பூமியை ஏற்படுத்த முக்கிய படியாக இருக்கும் என நம்புகிறோம்.”