சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. பலத்த மழை, கரோனா பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இணைய வழி முன்பதிவு வரிசையின் அடிப்படையில் பக்தா்கள் சபரிமலை புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
அதனைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுககளை தேவசம் போர்டு அறிவித்தது. அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 42 கி.மீ தொலைவு உள்ள பெருவழிபாதையும் நாளை முதல் திறக்கப்படுகிறது. மேலும் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45,000-ல் இருந்து 60,000 ஆக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக எருமேலி பாதையை திறக்கக் கோரி சங்கப் பரிவார் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.