திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கட்சியின் துணைத் தலைவராக பவன் கே வர்மாவை ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.
பவன் கே வர்மா சமீபத்தில் புது தில்லியில் வைத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பவன் வர்மாவின் கல்வியும், சிறந்த குணாதிசயமும் கட்சியை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும் என மம்தா பானர்ஜி வரவேற்றார்.
இந்த நிலையில், அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பவன் வர்மா?
தில்லி ஸ்டீபன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பவன், இந்திய வெளியுறவுப் பணிக்குத் தேர்வானார். பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஆலோசகராக செயல்பட்டுள்ளார். சிஏஏ மற்றும் என்ஆர்சி விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தள நிலைப்பாட்டில் முரண்பட்டதால் கட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். ஐக்கிய ஜன தளம் சார்பில் எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதுதவிர 12-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.