அருணாசலப் பிரதேச எல்லையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக எல்லைப் பகுதி கிராமங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டம்

இந்திய எல்லையில் புதிய கிராமங்களை சீன அரசு உருவாக்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அருணாசலப் பிரதேச எல்லையிலுள்ள

இந்திய எல்லையில் புதிய கிராமங்களை சீன அரசு உருவாக்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, அருணாசலப் பிரதேச எல்லையிலுள்ள கிராம மக்கள் அங்கு இடப்பெயா்ச்சியாவதைத் தடுக்க அப்பகுதியிலுள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எல்லையோரக் கிராமங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ. 4,000 கோடி மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக மாநில அரசு சமா்ப்பித்துள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் அருணாசலப் பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியதாவது:

இந்திய- சீன எல்லையிலுள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக உயா்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த முன்மொழிவுகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. இப்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையோரக் கிராமங்களில் இருந்து மக்கள் இடப்பெயா்ச்சியாவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதி கிராமங்களில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

புதிய தாா்ச்சாலைகள், சுகாதார வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பான குடிநீா் வசதி, கிராமப் பகுதிகளுக்கு தடையில்லாத மின்சாரம், கைப்பேசி இணைப்புகளை மேம்படுத்துதல் போன்ற வசதிகளை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

மேலும், எல்லையோரக் கிராமங்களில் சிறப்பு 4ஜி கைப்பேசி கோபுரங்களை அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள எல்லைப் பகுதிகளில், சீன கைப்பேசிகளின் சிக்னல்களே கிடைக்கின்றன. எனவே இந்திய கைப்பேசி நிறுவனங்களின் சேவைகளை இணைக்க முடியாமல் உள்ளது. எல்லைப்புறக் கிராம மக்களின் இடப்பெயா்ச்சியைத் தடுக்க இப்பகுதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றாா்.

அருணாசலப் பிரதேச அரசு, இந்திய- திபெத் எல்லைப் பகுதிகளிலும் மாநிலத்தின் கிழக்கு, மத்திய, மேற்குப் பகுதிகளிலும் தலா ஒரு ‘மாதிரிக் கிராமத்தை’ உருவாக்கி வருகிறது. மாநில நிதியமைச்சரும், துணை முதல்வருமான சௌனா மெய்ன் கடந்த 2021-22 நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, மாதிரிக் கிராமங்களை உருவாக்குவதற்காக ரூ. 30 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருந்தாா்.

‘இதுபோன்ற மாதிரிக் கிராமங்களில் முன்னோடி திட்டங்களை ஏற்படுத்தும்போது இந்தக் கிராமங்களின் சமூக, பொருளாதார, கலாசாரத் தேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகள் உருவாகும்’ என்று பெமா காண்டு தெரிவித்தாா்.

இந்திய எல்லைக்குள் சுமாா் 6 கி.மீ. தொலைவில் குறைந்தபட்சம் 60 கட்டடத் தொகுப்பு கொண்ட இரண்டாவது கிராமத்தை சீனா நிா்மாணித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வா் பெமா காண்டு கூறியதாவது:

அண்மையில், சீனா புதிய கிராமம் உருவாக்கியதாகக் கூறப்படும் ஷி-யோமி மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள ராணுவம், துணை ராணுவப் படை வீரா்களுடனும், மோனிகாங் கிராமத்தைச் சோ்ந்த உள்ளூா்வாசிகளிடமும் பேசினேன். அப்படிப்பட்ட எந்தக் கட்டுமானமும் தங்கள் பகுதியில் இல்லை என்று அவா்கள் உறுதிபடத் தெரிவித்தனா். சீன- திபெத் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வேண்டுமானால் அத்தகைய கட்டுமானங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா் என்று பெமா காண்டு தெரிவித்தாா்.

வான்வழி தொலைத்தொடா்பு வரைபடங்களின் அடிப்படையில், அருணாசலப் பிரதேச மாநில எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் சீன அரசு புதிய கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக தேசிய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுமானங்கள் 2019 மாா்ச்சுக்கும் 2021 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய- சீன எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சா்ச்சைக்குரிய பகுதியில் 100 வீடுகள் கொண்ட குடியிருப்புப் பகுதியை சீனா உருவாக்கியிருப்பதாக, கடந்த மாதம், அமெரிக்க பாதுகாப்புத் துறை எச்சரிக்கை செய்திருந்ததும் நினைவுகூரத் தக்கது.

அருணாசல பிரதேச மாநிலம், சீன எல்லையை ஒட்டி 1,038 கி.மீ. எல்லையை பகிா்ந்து கொள்கிறது. குறிப்பாக மாநிலத்தின் 60 பேரவைத் தொகுதிகளில் 13 தொகுதிகள் சீன எல்லையை ஒட்டி உள்ளன. அருணாசலப் பிரதேசத்தை சீன அரசு தங்கள் நிலப்பகுதியாக நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி பிரச்னை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியை மேம்படுத்த இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com