
பெற்றோர் கைவிட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அரசு வேலை
பஞ்சாப் மாநிலத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரர்களுக்கு மின்வாரியத்தில் அரசு வேலை கிடைத்துள்ளது.
சோஹ்னா - மோஹ்னா என்ற ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள்தான், பஞ்சாப் மாநில மின்வாரியத்தில் பணியில் சேர்ந்த முதல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாவர்.
ஐடிஐயில், மின்துறையில் டிப்ளமோ படித்திருக்கும் இந்த இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில், மாநில அரசு அவர்களுக்கு அரசு வேலை வழங்கி உதவியுள்ளது.
இரண்டு இதயம், இரண்டு ஜோடி கைகள், சிறுநீரகம், முதுகெலும்பு மற்றும் ஒரு கல்லீரல், ஒரு ஜோடி கால்களுடன் இவர்கள் ஒட்டிப்பிறந்தனர். 19 வயதாகும் இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 ஊதியம் வழங்கப்படும்.
தங்களுக்கு இந்த நல்வாய்ப்பை வழங்கிய மாநில அரசுக்கும், தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இருவரில், சோஹ்னாவின் பெயரில் பணி வழங்கப்பட்டுள்ளது. சோஹ்னா பணியாற்ற மோஹ்னாவும் தனது உதவியை செய்கிறார். அவர்களுக்கு சிறந்த பணி அனுபவமும் இருப்பதாகக் கூறுகிறார்கள் மின்துறை பொறியாளர்கள்.
இவர்கள் பிறந்ததுமே, அவர்களது பெற்றோர் இவர்களை கைவிட்டுவிடட்னர். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்தான் இவர்களை அமிருதசரஸில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து பராமரிக்க உதவி செய்தனர். அங்கு அவர்கள் யாரையும் சாராமல் வாழ பயிற்சி கொடுத்ததுடன், கல்வியும் கொடுத்து, தொழிற்கல்வியும் வழங்கியுள்ளனர்.