மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டம் சுகாதாரத்துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதில் தற்சார்பு இந்தியா அல்லது சுயசார்பு இந்தியா திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் (சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இது தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 64,180 கோடி ரூபாயில் புதிய மத்திய நிதியுதவித் திட்டமான சுயசார்பு ஆரோக்கியத் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.