புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த 2020-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெறும் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 75 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலத் பட்டேல், மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுமார் ஒரு கோடியே 93 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும், இது 2018-ஆம் ஆண்டில் 1 கோடியே 56 லட்சமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையாக இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1 கோடியை எட்டியதாகவும், அந்த ஆண்டில் பயணிகள் வருகை 1 கோடியே 4 லட்சமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020-ஆம் ஆண்டில் 26 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்ததாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 75 சதவீதம் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.