புது தில்லி: இந்தியாவில் வறுமையை அறவே ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
அப்போது அவர் கூறியதாவது, நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் வறுமையை அறவே ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது.
குடியரசுத் தலைவரின் உரையைக் கேட்காமலேயே பலரும் அது குறித்து விமரிசனம் செய்கிறார்கள். குடியரசுத்தலைவர் உரை என்பது மிகவும் வலிமையானது என்பதாலேயே, அதைக் கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்துவிடுகிறது. குடியரசுத் தலைவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா இன்று வாய்ப்புகள் உள்ள நாடாக இருக்கிறது. உலகத்தின்
பார்வை இந்தியா மீது உள்ளது. இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த உலகத்தின் நலனுக்கு, இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 75வது சுதந்திர ஆண்டில் இந்தியா நுழைவதால், நாம் இதை உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் மற்றும் நூறாவது
சுதந்திர ஆண்டான 2047-ல் இந்தியாவுக்கான நமது தொலை நோக்கின்
உறுதி மொழிகளுக்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள
வேண்டும் என பிரதமர் கூறினார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசிய பிரதமர்,
‘‘குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது, தற்போதும் உள்ளது, அது
எதிர்காலத்திலும் தொடரும்’’ என அழுத்தமாகக் கூறினார்.
ஏழைகளுக்கான மலிவு விலை ரேஷன் தொடரும். மண்டிகள்
நவீனமயமாக்கப்படும். விவசாயிகளின்
நலனுக்காக, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் செயல்பட வேண்டும் என
அவர் கூறினார்.