உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்தில், இதுவரை 34 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சமோலி மாவட்ட இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களைத் தேடும் பணி இன்று (பிப்.11) 5-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மீட்கப்பட்ட உடல்களின் மாதிரிகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுரங்கத்தினுள் நிரம்பியுள்ள இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நேற்று வரை நடைபெற்றது.
தற்போது சுரங்கத்தினுள் துளைகள் அமைத்து முன்னேறும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். எனினும் இயந்திரம் சேதமடைந்ததால் அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.